வால்பாறை: வால்பாறையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு மற்றும் வால்பாறை பூங்கா பகுதியில் உள்ள சிறு வனப்பகுதிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம், வால்பாறை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் காமராஜ் நகரில் பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளது. நேற்று பிற்பகல் மர்ம நபர்கள் புதர் காடுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீ கொளுந்து விட்டு எரிந்து பரவியது. மேலும் பூங்கா பகுதிக்கும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். எனவே அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் அபாய மரங்களின் உயரத்தை வெட்டிக்குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.