வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையால் பாதிப்படைத்துள்ள மக்கள் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டதாகும். இப்பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் நாய்கள் கூட்டம், கூட்டமாக தெருக்களில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக ஆர்.வி.நகர், நீரேத்தான், தாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் திரியும் தெரு நாய்கள் திடீரென குழந்தைகள், முதியவர்கள் என பலரையும் தாக்கி விடுகின்றன. அதேபோன்று இரவு நேரங்களில் தெருக்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன.
இதுபோன்ற நேரங்களில் அவர்களில் பலரும் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயம் அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றிவரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.