வடலூர்: வடலூர் சத்தியஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிவரை நடைபெற்றது. நாளை மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு 153வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ேஜாதி தரிசனம் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் இன்று காலை 5.30 மணிக்கு 6வது கால ஜோதி தரிசனம் நடந்தது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். நாளை (27ம்தேதி) மதியம் 12 மணி முதல் மாலை 7 மணிவரை வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடக்கிறது. முன்னதாக வடலூர் சத்தியஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் ஒரு பேழையில் வைத்து அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டுவரப்படும்.