Saturday, April 27, 2024
Home » உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார்

உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார்

by Suresh

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி, மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு உணவில் விஷம் கலந்து கொன்றதாக அவரது மகன் புகார் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏவும், பிரபல தாதாவுமான முக்தார் அன்சாரி (63), பகுஜன் சமாஜ்வாதி கட்சியிலும், பின்னர் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியிலும் இருந்தார். உத்தரபிரதேச மாநிலம் மவு தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்சாரி மீது 15 கொலை வழக்குகள் உட்பட 61 குற்ற வழக்குகள் உள்ளன. காஜிபூர், வாரணாசி, ஜான்பூர் போன்ற மாவட்டங்களில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி போன்ற குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2004ம் ஆண்டு, அவரது வீட்டில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். மேலும் போலி துப்பாக்கி உரிம வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்த அன்சாரி, ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்றிரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அன்சாரியின் மரணம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரது கும்பலைச் சேர்ந்தவர்களால் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு தொடங்கி விடிய விடிய போலீஸ் ரோந்து அதிகமாக இருந்தது. பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முக்தார் அன்சாரி மரணம் குறித்து அவரது மகன் உமர் அன்சாரி கூறுகையில், ‘எனது தந்தை சிறையில் இருந்த போது, அவருக்கு அளிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது. எனது தந்தையின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை சந்திக்க சென்றேன். ஆனால் என்னை அனுமதிக்கவில்லை. அவரது உடலை ஐந்து மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்தது’ என்றார்.

You may also like

Leave a Comment

twelve − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi