Wednesday, May 8, 2024
Home » மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தில் மட்டுமே நாட்டம் இருப்பதாகவும் காட்டம்!!

மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தில் மட்டுமே நாட்டம் இருப்பதாகவும் காட்டம்!!

by Porselvi

டெல்லி : டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க தவறிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நிர்வாகம் நடத்துவதற்கு பதிலாக அதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக நீதிமன்றம் விமர்சித்துள்ளது. டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு இருப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதால் இந்த விவகாரத்தில் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

டெல்லி மாநகராட்சி ஆணையர் தரப்பில் ரூ.5 கோடிக்கு மேலான ஒப்பந்தத்திற்கு நிலைக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தற்போது நிலைக்குழு அமைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, நிர்வாக விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது, அரசின் கடமை என்றும் இந்த விஷயத்தில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க நேர்ந்தால் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே நிர்வாகத்தை கவனிக்க முடியும் என்ற அரசு தரப்பு வாதத்தின் மீதும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நலனைவிட தனிப்பட்ட நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதிகாரத்தில் மட்டுமே நாட்டம் கொண்டு இருப்பதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார். நிலைக்குழு அமைக்கப்படாததால் டெல்லியில் பல திட்டங்கள் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி, உங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பவர்களுக்கு இரக்கமே இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கடுமையாக சாடினார்.

You may also like

Leave a Comment

14 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi