லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் போலீஸ் ஜீப் விபத்துக்குள்ளானதில் ஐந்து போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் போலீஸ் வாகனம் அர்ஜுன்கஞ்ச் மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த மாடு ஒன்று குறுக்கே ஓடியது. அதனால் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது மோதியது.
இதுகுறித்து லக்னோ காவல்துறை ஆணையர் எஸ்.பி ஷிராத்கர் கூறுகையில், ‘அர்ஜுன்கஞ்ச் மார்க்கெட் பகுதியில் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களுக்கு முன்னால் சென்ற போலீஸ் ஜீப் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், போலீஸ் ஜீப்பில் இருந்த 5 போலீசாரும், இரண்டு கார்களில் இருந்த 10 பேரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தின் போது முதல்வர் யோகி ஆதித்யநாத், அர்ஜுன்கஞ்ச் மார்க்கெட் பகுதியின் வழியாக சென்றாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தில் தெருவில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் ஆபத்துகள் உண்மையாகி உள்ளது. இந்த பிரச்னையை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், முதலமைச்சரின் கான்வாய் வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திலிருந்து ஆளும் பாஜக அரசு பாடம் எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.