உத்திரமேரூர்: ஒன்றிய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், காஞ்சிபுரம் நேரு யுவகேந்திரா சங்கதன், காஞ்சி மாவட்ட இந்தியன் வங்கிகளின் முன்னோடி வங்கி மற்றும் மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து எனது மண் எனது தேசம் என்ற திட்டத்தின் கீழ் அமுத கலச யாத்திரை நிகழ்ச்சி நேற்று உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கிகளின் கிளை மேலாளர்கள் டேவிட், அமலராஜ், நாகேந்திரசிங், சந்திரகுமார் முன்னிலை வகித்தனர். காஞ்சி நேரு யுவகேந்திரா சங்கதன் அலுவலர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட இந்தியன் வங்கிகளின் முன்னோடி வங்கி மேலாளர் திலீப் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தேசத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் வீர வீராங்கணைக்கு வீர வணக்கம் செலுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது. மேலும் எனது மண் எனது தேசம் என்ற திட்டத்தின் கீழ் அமுத கலச யாத்திரை பேரணி நடந்தது. இதில், கல்லூரி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேசத்தின் ஒற்றுமையினை வலியுறுத்தும் வகையில் மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் சுதந்திர தின அமுத பெருவிழாவில் டெல்லியில் அமைக்கப்பட உள்ள விவேகானந்தர் உருவ சிலைக்கு வட்டார அளவில் மண் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. நிறைவாக மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பரத் நன்றி கூறினார் விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.