உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி மே 17 முதல் 22 வரை 6 நாட்கள் நடைபெறும் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் மலர் கண்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இம்மலர் கண்காட்சி மற்றும் இதர காட்சிகள் ஆண்டு தோறும் மலர்க் கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சி குழுவினரால் காட்சிகள் நடத்து வதற்கான தேதிகள், ஏற்பாடுகள் மற்றும் வரவு, செலவு குறித்தான தீர்மானங்கள் அனைத்தும் மலர் மற்றும் பழ கண்காட்சி குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மலர் மற்றும் பழ கண்காட்சி குழுவில் தோட்டக் கலைத் துறை இயக்குநர் மற்றும் குழுத் தலைவர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் குழு உப தலைவர், நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் மற்றும் குழு செயலாளர், அரசு தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் குழு இணை செயலாளர், திட்ட இயக்குநர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் முக்கிய உறுப்பினர்களைக் கொண்டு இம்மலர் மற்றும் பழ கண்காட்சி குழுக் கூட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு மலர் மற்றும் பழ கண்காட்சி குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதனடிப்படையில் இந்தாண்டு இம்மாவட்டத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மூன்று நாட்கள் 64வது பழக்கண்காட்சி நடைபெறும் என்றும். கோடை சீசனின் முதலில் கோத்தகிரி காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு இரண்டு கண்காட்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்தார்.