உசிலம்பட்டி: பெண்களுக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக, மதுரை மாவட்ட பாஜ தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சொந்தக் கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மேற்கு மாவட்ட பாஜ தலைவராக இருப்பவர் சசிக்குமார். இவர், கட்சிக்கும், பெண்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக உசிலம்பட்டி நகரின் முக்கிய பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சியினரே போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில், ‘பெண்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாரை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது மாநில தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூண்டாதே; தூண்டாதே போராட்டத்தை தூண்டாதே. இப்படிக்கு பாரதிய ஜனதா கட்சியை நேசிக்கும் உண்மையான தொண்டர்கள் என வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. பாஜ மாவட்ட தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சொந்த கட்சியினரே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.