மான்டிவீடியோ : உருகுவே நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தென் அமெரிக்க நாடான உருகுவே 74 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சியை சந்தித்துள்ளது. தலைநகர் மான்டிவீடியோவில் முக்கிய நீர் தேக்கங்கள் வறண்டு காணப்படுகின்றன. மே மாத தொடக்கத்தில் இருந்து நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டு அதிபர் Luis Lacalle Pou அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பாட்டில் தண்ணீருக்கு வரி விலக்கு மற்றும் நீர் தேக்க பணிகள் போன்ற நடவடிக்கைகளை அறிவித்தார். இதில் நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ள ஒரு மாதம் ஆகும் என்றும் மருத்துவமனைகள், குடியிருப்பு வீடுகள், குழந்தைகள் மற்றும் குடும்பப் பராமரிப்பு மையங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். அதன்படி, 21,000 பயனாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.