தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், 44வது வார்டுக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட உள்ள நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டுமான பணிகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அதே பகுதியில் அமைந்துள்ள பூங்காவை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட அவர், சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்கவும், குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.