Monday, June 17, 2024
Home » 12 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.112 கோடியில் கசடு கழிவுநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்: தூய்மை நகரங்களாக மாற்ற நடவடிக்கை

12 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.112 கோடியில் கசடு கழிவுநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்: தூய்மை நகரங்களாக மாற்ற நடவடிக்கை

by MuthuKumar
Published: Last Updated on

சிறப்பு செய்தி
இந்திய அரசு திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுயைமாக ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கில் 1999ம் ஆண்டு இந்திய அரசு முழு சுகாதாரத் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவந்தது. 2014ம் ஆண்டு முதல் இது தூய்மை இந்தியா திட்டம் என்ற புதிய பெயரில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு திறந்த வெளிகழிப்பறைகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு உண்மையானதாக இல்லை என பல்வேறு ஆய்வறிக்கையில் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து தூய்மை பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை நீடித்து நிலைக்கச் செய்ய தூய்மை இந்தியா திட்டம் 2.0 தொடங்கப்பட்டது.

அனைத்து நகரங்களையும் குப்பைகள் இல்லாத நகரங்களாகவும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும் ஆக்குவதே தூய்மை இந்தியா திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். நகரங்களைத் தூய்மையாக்குவதற்கும், குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதற்கும் தூய்மையான மக்கள் இயக்கத்தை கடந்த 2022ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4 வகையான தலைப்புகளில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களும் வெளியிடப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகரங்களாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கழிப்பறைகளை வழங்குவதன் மூலம், அனைத்து நகர்ப்புறங்களையும் தொடர்ந்து திறந்தவெளி மலம் கழிக்காத நகரங்களாக நீடித்து நிலைக்கச் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேவைக்கேற்ப தனி நபர் வீட்டுக் கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள், பொது கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் அனைத்து நகரங்களிலும் திறந்த வெளிமலம் கழித்தல் இல்லாத நிலையை நிலை நிறுத்துவது, சுத்திகரிக்கப்படாத கசடு கழிவு, கழிவுநீர் வெளியேற்றப்படுவதை உறுதி செய்வது, பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்கப்பட்டு அதிகளவில் பயன்படுத்துதல் போன்ற இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாகும். இதனிடையே தமிழகத்தில் ₹112.80 கோடியில் 12 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கழிவுநீர் மற்றும் கசடுகழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அனைத்து நகரங்களையும் தூய்மையான மற்றும் குப்பை இல்லா நகரமாக மாற்றுவதுடன் 100% திடக்கழிவுகளை அறிவியல் முறையில் செயலாற்றதாக செய்தல், உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், கட்டுமானம் மற்றும் இதர கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்தல், நெகிழி கழிவுமேலாண்மை மற்றும் அனைத்து தேக்கத் திடக்கழிவுகள் கொட்டும் இடங்களையும் சரிசெய்ய பயன்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தின் மூலம் நடைப்பெற்று வருகிறது. இதனிடையே கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ₹112.80 கோடியில் 12 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கழிவுநீர் மற்றும் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு 29.5 எம்எல்டி ஆகும். கழிவுநீர் கசடு சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவு 160 கேஎல்டி ஆகும்’ என்றார்.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi