Sunday, May 19, 2024
Home » நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.284 கோடியில் கட்டிய 2,828 மெகா குடியிருப்புகள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.284 கோடியில் கட்டிய 2,828 மெகா குடியிருப்புகள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Karthik Yash
Published: Last Updated on

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், 330 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள், 5,430 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் 518 பயனாளிகளுக்கு அடுக்குமாடி மற்றும் மனைகளுக்கான உரிமை ஆவணங்களை வழங்கினார். சென்னை என்.வி.என். நகர் திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தூண் மற்றும் 14 அடுக்குகளுடன் ரூ.104.10 கோடி செலவில் 840 புதிய குடியிருப்புகள்; தேனி அப்பியபட்டி திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் ரூ.41.50 கோடி செலவில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள், போடிநாயக்கனூர், பரமசிவன் கோயில் தெரு திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் ரூ.16.35 கோடி செலவில் 168 அடுக்குமாடி குடியிருப்புகள்;

திருச்சி இருங்களுர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் ரூ.21.16 கோடி செலவில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள், தஞ்சாவூர் கூடநாணல் திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் 19.21 கோடி ரூபாய் செலவில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஈரோடு அரக்கன்கோட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் ரூ.15.16 கோடி செலவில் 180 அடுக்குமாடி குடியிருப்புகள், கோயம்புத்தூர் பச்சினம்பதி திட்டப்பகுதியில் தனி வீடுகளாக ரூ.6.88 கோடி செலவில் 80 குடியிருப்புகள், உக்கடம் பகுதி IV திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.19.39 கோடி செலவில் 224 அடுக்குமாடி குடியிருப்புகள்;

வேலூர் தொரப்பாடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.17.41 கோடி செலவில் 160 அடுக்குமாடி குடியிருப்புகள், இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.23.16 கோடி ரூபாய் செலவில் 264 குடியிருப்புகள்; என மொத்தம் ரூ.284.32 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்புகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ரூ.1225.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 12,495 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு மற்றும் பணி ஆணைகள் வழங்குதல்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 330 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 157 பகுதிகளில் வசிக்கும் 5,430 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம், 114 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 350 உரிமை ஆவணங்களும், மனைகளுக்கான 168 உரிமை ஆவணங்களும், என 518 பயனாளிகளுக்கு உரிமை ஆவணங்களை வழங்கிடும் அடையாளமாக 4 பயனாளிகளுக்கு ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

14 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi