கராச்சி: இந்திய காதலனை கரம் பிடித்த பெண் சீமாவிடம் இருந்து 4 குழந்தைகளை மீட்க சீமாவின் முன்னாள் கணவர் இந்திய வழக்கறிஞரை நியமித்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஜகோபாபாத்தை சேர்ந்த சீமா (31). இவருக்கு குலாம் ஹைதர் என்பவருடன் திருமணம் நடந்தது. குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வரும் நிலையில் சீமா 4 குழந்தைகளுடன் கராச்சியில் வசித்து வந்தார். இந்நிலையில் பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனா(22) என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து காதலனை தேடி கடந்த மே மாதம் நேபாளம் வழியாக குழந்தைகளுடன் இந்தியா வந்த சீமா சச்சினுடன் சேர்ந்த வாழ ஆரம்பித்தார். தற்போது சச்சின் மீனா, சீமா தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து குழந்தைகளின் நலன் கருதி சீமாவுடன் இருக்கும் 4 ஆண் குழந்தைகளை மீட்க அவரது முன்னாள் கணவர் குலாம் ஹைதர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் இந்தியாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ளார்.