லக்னோ: கவிஞர் மதுமிதா கொலை வழக்கில் உபி முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி, மனைவி மதுமணி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். உபி மாநிலத்தை சேர்ந்த கவிஞர் மதுமிதா சுக்லா என்பவர் லக்னோவில் வைத்து கடந்த 2003ம் ஆண்டு மே 9ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உபி முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி மற்றும் அவரது மனைவி மதுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி, அவரது மனைவி மதுமணிக்கு 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுள்தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர்கள் உபி மாநிலம் கோரக்பூரில் உள்ள சிறையில் கடந்த 16 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் உபி அரசு அமர்மணி திரிபாதி, மதுமணி ஆகியோரை முன்கூட்டியே விடுவிக்க தீர்மானித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் அனியுத்த போஸ், பெல்லா திரிவேதி ஆகியோர் அமர்மணி திரிபாதி, மனைவி மதுமணி விடுதலைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.