‘‘உப்பு சப்பு இல்லாத பொதுக்குழுவா இருந்திச்சாமே’’ன்னு இழுத்தபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது என்றால் கட்சியின் தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படுமாம். பொதுக்குழுவுக்கு போனால் விதவிதமாக சாப்பிடலாம், உற்சாகம் எழும் வகையிலான பேச்சு இருக்கும் என்பதுதானாம். அதே போல நானா, நீயா என தேனிக்காரரும், சேலத்துக்காரரும் கூட்டிய பொதுக்குழுவில் கூட பாட்டில் வீச்சில் தொடங்கி ெராம்பவே உணர்ச்சி பொங்கலா இருந்துச்சாம். ஆனா, சேலத்துக்காரர் தலைமையில் கூடிய பொதுக்குழுவில் எந்த சுவாரசியமும் இல்லையாம். ஏதோ சம்பிரதாயத்திற்கு கூடியது போன்ற உணர்வுகளே பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்துச்சாம். தலைவர்களின் முகத்தில் எந்த சிரிப்பும் இல்லையாம். தொண்டர்களுக்கும் உற்சாகம் கிளம்பலையாம். இதனால தொண்டர்கள் ரொம்பவே ஷாக்காயிருக்காங்களாம். ‘எத்தனையோ பொதுக்குழுவை பாத்திருக்கேன், இதுபோன்ற பொதுக்குழுவை பாத்ததே இல்லை. விரைவில் தேர்தல் வர இருக்கிற நிலையில் அதற்கான அதிகாரத்தை பொதுச்செயலாளருக்கு வழங்கும் தீர்மானம் கூட இல்ல. தேர்தல் பற்றி கூட யாரும் பேசல. கடமைக்காக கூட்டப்பட்ட கூட்டமாகவே இருந்துச்சி. மேடையில் இருந்தவர்களை பார்க்கும்போது எந்த மகிழ்ச்சியும் இல்லாம மிரட்சியாகவே இருந்தனர். வெளியில் தொண்டர்கள் கூட்டமும் இல்லை. சாப்பாட்டை பாத்தே தெரிந்து கொண்டோம். உப்பு சப்பு இல்லாத பொதுக்குழுவாகவே இருந்துச்சு. மூன்று பேரை வைத்திருக்கும் தேனிக்காரர் சிரிச்சிக்கிட்டே போறாரு. ஆனா, கூட்டமாக இருக்கும் சேலத்துக்காரர் சிரிக்காம இருப்பதை பார்க்கும்போது ஏதோ பெருசா ஒண்ணு இருக்குன்னு இலை தொண்டர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க. அதேநேரத்துல பாஜவை திட்டி பேசக்கூடாதுன்னு மணியானவர்களும், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 2 மாஜிக்களும் எடப்பாடியை கேட்டுக் கொண்டார்களாம். ஆனால் அவர் வேண்டும் என்றே பாஜவை சீண்டுவதுபோல சி.வி.சண்முகம், முனுசாமி பேச்சைக் கேட்டு பேசினாராம். இதனால நம்மள ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டார்போல என்று மத்திய மண்டல மாஜி அமைச்சர்கள் இரண்டு பேரும் மேடையிலேயே பேசிக்கிட்டாங்களாம்.’’ என்று விளக்கினார் விக்கியானந்தா.
‘‘செயல்படாத கோயம்பேடு கட்சியால் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் மாற்று கட்சிக்கு தாவ நிர்வாகிகள் முடிவு செஞ்சிட்டாங்களாமே’’ என அடுத்த பிரச்னைக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சியில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்துக்கு என 2 செயலாளர்கள் இக்காங்க. இதில் மாநகரத்துக்கு முதல் எழுத்தில் ஆரம்பிக்க கூடிய அரவை பெயர் கொண்டவரும், புறநகர் மாவட்டத்துக்கு முதல் எழுத்தில் ஆரம்பிக்ககூடிய சிவம் பெயர் கொண்டவரும் உள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை பொறுத்தவரை கட்சி சார்பில் எந்தவொரு முக்கிய நிகழ்ச்சிகள் கூட இதுவரை நடக்கவில்லை. இதில் மாநகர், புறநகர் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் கூட தொண்டர்களை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். கட்சி தலைமையும் நிர்வாகிகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியமாட்டேங்குது என தொண்டர்கள் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்…
குறிப்பாக, கட்சி சார்பில் முக்கிய நிகழ்ச்சிகள் கூட நடக்காததற்கான காரணம் ‘ விட்டமின் ப ’ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சி செயல்படாமல் முடங்கி உள்ளது என பின்னர் தான் தொண்டர்களுக்கு தெரிய வந்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட கட்சி செயல்படாமல் இருந்தால், நம்முடைய அரசியல் நகர்வு இல்லாமல் போய் விடும் என மாவட்ட செயலாளர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அவர்களுக்குள் புலம்புகிறார்களாம்… இனியும் கோயம்பேடு கட்சியை நம்பி இருந்தால் அட்ரஸ் இல்லாமல் போகும் நிலை ஏற்படக்கூடும். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்குள் பழைய மாதிரி கட்சி செயல்படாவிட்டால் கூண்டோடு மாற்று கட்சிக்கு தாவி விட வேண்டியது தான் என நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை முடிவு எடுத்துள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஹனிபீ மாவட்ட முக்கிய நிர்வாகிங்களை கட்சி தலைமை போனில் கூப்பிட்டு திட்டியதா ஒரு தகவல் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் 2 முதல்வர்களை தந்த மாவட்டம் என பெயரெடுத்த ஹனிபீ மாவட்டத்தில், அக்கட்சியை நிறுவியவரின் நினைவு நாள் சரிவர அனுசரிக்கப்படவில்லை என தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் தேனிக்காரர் ஆதரவாளர்கள் பலர், சமீபத்தில் இலைக்கட்சிக்கு மாறினர். மாவட்டத்தில் பலம் கூடிய நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் படம் வைத்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட சூழலில், ஹனிபீ மாவட்டத்தில் கண்டுகொள்ளாததால் தொண்டர்கள் டென்ஷனில் இருக்கிறார்களாம். ஹனிபீ நகரில் உள்ள சிலைக்கு மட்டும் பெயருக்கு மாலை அணிவித்து இருக்கின்றனர். வேறெங்கும் படம் வைத்து நினைவுதினம் அனுசரிக்கப்படவில்லை. தேனிக்காரர் தரப்பினரும், பிளக்ஸ் பேனர்கள் வைத்ததோடு, ஒப்புக்கு நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர். 2 முதல்வர்களை தந்த மாவட்டம்னு பெயர் பெற்ற மாவட்டத்தில் கட்சியை நிறுவியவரின் நினைவு தினத்தை கண்டுகொள்ளாமல் விடலாமா என இலைக்கட்சி மூத்த உறுப்பினர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் இலை தலைமைக்கு தெரிய வர, அங்குள்ள முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை போனில் அழைத்து கடிந்து கொண்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வீட்டையே ஆபீசா மாத்திட்டாங்களாமே’’ என்று ஆச்சரியமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல அணையான தாலுகாவுல, சன் லைட்டில் மணி காட்டும் ஸ்டோன் இருக்கிற ஊராட்சியோட தலைவி இருக்காங்க. இவங்க பெயருக்குத்தான் தலைவியாம். இவருக்கு நிர்வாகம், கணக்கு வழக்கு, கோப்புகளை பார்க்குறது, பணியாளர்களை கையாளும் விஷயம்னு எதிலயும் அனுபவம் இல்லையாம். ஆனா, இவங்க ஆத்துக்காரர் எந்த இடியாப்ப சிக்கலாக இருந்தாலும், அதை கையாள புது ரூட்டு போட்டு, அந்த ஊர் ஆட்சியோட ஆபிசையே தன் வீட்டுல நடத்தி வர்றதாக புகார் சொல்றாங்க. கவர்மென்ட் ஆபீசர் தொடங்கி, பாமர மக்கள் வரைக்கும், தங்களது கோரிக்கைய சொல்றதுக்கு இவர் வீட்டு முன்னாடி தான் போய் நிற்க வேண்டியிருக்குறதா ஜனங்க பீல் பன்றாங்க. கடந்த மாசமே தூய்மை பணியாளர்கள் பிரச்னை நடந்து காக்கிகள் நிலையம் வரைக்கும் புகார் குரல் ஒலிச்சது. இப்ப திரும்பவும் வேற விதமாக ஒலிக்கத் தொடங்கியிருக்குது. சம்மந்தப்பட்ட அதிகாரிங்க என்னென்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்கு..’’ன்னு சொல்லி முடித்தார் விக்கியானந்தா.