பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் இலவச திட்டங்களான கிரக ஜோதி ஆகஸ்ட் 1ம் தேதியும், கிரகலட்சுமி திட்டம் ஆக.17 அல்லது 18ம் தேதி அமல்படுத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
‘கிரக ஜோதி என்னும் இலவச 200 அலகு மின்சார திட்டம் ஆக.1ம் தேதி அமல்படுத்தப்படும். கிரக லட்சுமி என்னும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 தரும் திட்டம் ஆக.17 அல்லது 18ம் தேதி அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இரு திட்டமும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் ஆகும். கிரக ஜோதி திட்டம் ஆக.1ம் தேதி கலபுர்கியில் தொடங்கிவைக்கப்படும்.
பெலகாவியில் ஆக.17 அல்லது 18ம் தேதி கிரகலட்சுமி திட்டம் தொடங்கிவைக்கப்படும். வாடகைதாரர்களுக்கும் கிரகஜோதி திட்டத்தின் கீழ் இலவச மின்சாரம் விரிவுபடுத்தப்படும். பிபிஎல், ஏபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்தலைவிகளுக்கு ரூ.2000 நிதியுதவி பெறும் கிரகலட்சுமி திட்டம் பொருந்தும். ஆனால் குடும்பத்தில் யாராவது வருமானவரி, ஜிஎஸ்டி கட்டுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு பொருந்தாது. அனைத்து இலவச திட்டங்களுக்கும் ஜூன் 15 முதல் பதிவுகள் தொடங்கும். மின்கட்டண பாக்கி தொகை வைத்திருப்பவர்கள் செப்.30க்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்’ என்றார்