சென்னை: தமிழ்நாட்டில், கடந்த 10 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் 27 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஒருங்கிணைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்த சிறப்பு நடவடிக்கையின் இதுவரை 25 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் என மொத்தம் 27 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.