டெல்லி: கடந்தாண்டு ஒன்றிய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிகமான ஊழல் புகார்கள் பெறப்பட்டதாக ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வருடாந்திர அறிக்கையில், கடந்தாண்டு ஒன்றிய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக 1,15,203 ஊழல் புகார்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிராக 46,643 ஊழல் புகார்கள் வந்துள்ளன.
ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக 10,580 புகார்களும், வங்கி ஊழியர்களுக்கு எதிராக 8,129 புகார்களும் பெறப்பட்டுள்ளன. டெல்லி பிராந்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 7,370 புகார்களும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4,710 புகார்களும் கூறப்பட்டுள்ளன. நிலக்கரி அமைச்சக ஊழியர்கள் மீது 4,304 புகார்களும், பெட்ரோலிய அமைச்சக ஊழியர்கள் மீது 2,617 புகார்களும், நேரடி வரிகள் வாரிய ஊழியர்கள் மீது 2,150 ஊழல் புகார்களும் பெறப்பட்டுள்ளன.
ராணுவ அமைச்சக ஊழியர்கள் மீது 1,619 புகார்களும், தொலைத்தொடர்புத்துறை ஊழியர்கள் மீது 1,308 புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சக ஊழியர்கள் மீது 1,202 புகார்களும், காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் மீது 987 புகார்களும் வந்திருப்பதாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.