சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.27.96 கோடி மதிப்பீட்டில் காசநோயை கண்டறிய அதிநவீன விரைவு மூலக்கூறு கண்டறியும் கருவிகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) நிறுவனத்தின் பெரு நிறுவன கூட்டு சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியிலிருந்து வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த ஓராண்டு முழுவதும் 20 லட்சம் சளி பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 97,000 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். உலக அளவில் கோவிட் 5வது டோஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அதற்கான அவசியம் தற்போது எழவில்லை என்று சொல்லி உள்ளது. இதுவரை 23 ஜே.என்.1.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகளுக்கும், மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மருத்துவ கட்டமைப்புகளை சரிசெய்வதற்கும் ரூ.49 கோடி ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.