புதுச்சேரி: ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து புதுச்சேரியில் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு 4 ஆண்டுகளாக மாற்றப்பட்ட நிலையில், முதுகலை தமிழ் பட்டப்படிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் முதலாம் ஆண்டில் இரு பருவங்களில் மட்டுமே தமிழ் பாடங்கள் நடத்தப்படவுள்ளதற்கு மாணவிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 4 பருவங்கள் வரை தமிழ் பாடங்களை நடத்த வலியுறுத்தி வரும் மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வியாளர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.