புதுடெல்லி: சிபிஐயின் புதிய இயக்குநராக கர்நாடகா போலீஸ் டிஜிபி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவிக்காலம் வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இதில் 3 அதிகாரிகள் பெயர்கள் பரீசிலிக்கப்பட்ட நிலையில், கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட் பெயர் தேர்வு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிபிஐயின் அடுத்த இயக்குநராக பிரவீன் சூட் நியமிக்கப்படுவதாக ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 59 வயதான பிரவீன் சூட், 1986ம் ஆண்டு கர்நாடகா பேஜ் ஐபிஎஸ் அதிகாரியாவார். கடந்த 2020ல் கர்நாடகா டிஜிபியாக பொறுப்பேற்ற இவர் அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில், புதிய சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தேர்வுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.