சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலை-2ம் திட்டப் பணியை வேகப்படுத்துவதற்கு, போதுமான நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்பி. இரா.கிரிராஜன் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று அவர் பேசியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிலை-2 திட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், அதிக மக்கள் தொகையின் தேவைகளை நிறைவு செய்யவும் 118.9 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.61,843 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்த தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. ஒன்றிய அரசு இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்த்து தமிழக அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இன்னும் நிலுவையில் இருப்பதால், இந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாயை கூட செலுத்தவில்லை.இந்தாண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை 52.01 கிமீ நீளமுள்ள 2ம் கட்டத்தை நிர்மாணிக்க ரூ.20,196 கோடி கடன் வழங்க முன்வந்துள்ளது, மீதமுள்ள 66.89 கி.மீ நீளத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி கொள்கை அளவில் நிதியளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு உறுதியாக இருந்தாலும், ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கத் தவறினால், இத்திட்டத்திற்கு சிக்கல் ஏற்படும்.
எனவே, ஒன்றிய அரசு இதற்கான நிதியை வேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.