மதுரை: சென்னை, அங்கப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்த வக்கீல் கனிமொழிமதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவினர், சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.இதில் பூமிக்கடியில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் இலக்கிய சிறப்புக்கு உயிர் கொடுக்கும் 5,300 பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த பொருட்களை பெங்களூரூ அருகிலுள்ள பனலுரு பகுதியில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை பெங்களூரூ கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். கீழடி அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறும், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும் அகழாய்வு நடந்த பகுதியிலேயே மியூசியம் அமைக்கவும், அகழாய்வை தொடரவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி பி.தனபால் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்துது. ஒன்றிய அரசு துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் ஆஜராகி, ‘‘கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட 5,765 பழமையான தொல்லியல் பொருட்கள், ஒன்றிய தொல்லியல் துறையின் சென்னை சரக அலுவலகத்தில் தொடர் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். அமர்நாத் ராமகிருஷ்ணன், இங்கிருந்து கவுகாத்தி, கோவா உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது சென்னையில் ேகாயில் பிரிவு பணியில் ஈடுபட்டுள்ளார்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது சென்னையில் தான் பணியில் உள்ளார். அதே நேரம் கீழடியில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கில் இன்னும் 9 மாதத்தில் தொல்லியல் ஆய்வறிக்கையை வெளியிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட்ட பிறகு, ஒன்றிய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள 5,765 பழமையான அகழாய்வு பொருட்களை, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த பழமையான பொருட்களை தமிழக அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுக்களை முடித்து வைத்தனர்.