தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை விவரம்: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்திட்ட பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒன்றிய அரசு, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இத்திட்டத்தில் ஒன்றிய அரசும், நமது அரசும் 50:50 என்ற விகிதத்தில் சமபங்களிப்பு இருக்கும் என்ற அடிப்படையில் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம், 2021-22ன் ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டு, உள்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால், 17.8.21 அன்று திட்ட முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தும், இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதே காலத்தில் பிற மாநிலங்களில் இத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது வருத்தத்தை அளிக்கின்றது. இந்த நியாயமற்ற அணுகுமுறையின் விளைவாக, 2ம் கட்டத்திற்கான முழு செலவும் மாநில அரசின் வரவு செலவு திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாநில நிதிநிலையில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஒன்றிய அரசு ஒப்புதலை விரைவில் அளிக்க வலியுறுத்துகிறோம்.