திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளருமான துரை.வைகோ புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 10 ஆண்டு காலம் ஆட்சியில் பாஜ ஒரு இடத்தில் கூட கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்களா?. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுக்கு நான்கு சம்பவம் நடக்கும். தமிழ்நாடு மீனவர்களை பிடிப்பது, அவர்களது படகுகளை சேதப்படுத்துவது என்று வாரத்துக்கு இரண்டு சம்பவம், மாதத்திற்கு 10 சம்பவம் என 200க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.
மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மாதத்திற்கு 40, 50 மீனவர்களை கைது செய்கின்றனர். இதற்கு பாஜ ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று கூறுவது ஒரு மலிவான அரசியல். இதைவிட கேவலமான ஒரு அரசியல் இருக்க முடியாது. இங்குள்ள மீனவ மக்கள், ஒவ்வொரு நாளும் செத்து பிழைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.