புழல்: சோழவரம் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. சோழவரம் ஒன்றிய குழு கவுன்சிலர்களின் மாதாந்திரக் கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜாத்தி செல்வ சேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சுபதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆண்டார்குப்பம், போந்தவாக்கம், நத்தம், மாதவரம், அத்திப்பேடு, அழிஞ்சிவாக்கம், வழுதிகைமேடு, சீமாவரம், அருமந்தை, ஒரக்காடு, நெற்குன்றம், காரனோடை, சோழவரம், புதிய எருமை வெட்டி பாளையம், அலமாதி, நல்லூர், பாடியநல்லூர், ஆங்காடு, விச்சூர் ஆகிய ஊராட்சிகளில் தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ஒன்றிய பொது நிதி ரூ.2.5 கோடி செலவில் பணிகள் மேற்கொள்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.