சென்னை: தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறதா என்பதற்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: அதிமுக, பாஜ கூட்டணி ரொம்ப வலுவாக உள்ளது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார். எங்களுடைய மாநில தலைவரும் சொல்லியிருக்கிறார். நானும் பலமுறை சொல்லியிருக்கிறேன். எங்களுடைய கூட்டணியின் கட்சி தலைவரான அதிமுக தலைவர்களும் இதை சொல்லியிருக்கிறார்கள். எங்களுடைய கூட்டணியானது மிகவும் வலிமையான கூட்டணியாக இருக்கிறது. இந்த கூட்டணியானது தொடரும்.
எங்களுடைய நிர்வாகிகள் கூட்டங்களில் சில விஷயங்களை பேசுவது வழக்கம். அண்ணாமலையின் கருத்து என்னவென்றால் நம்முடைய கட்சி இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர் கூறியதை நான் சர்ச்சைக்குரியதாக கருதவில்லை. அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். பாஜ ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எங்களுடைய ஜனாகிருஷ்ணமூர்த்தி காலம் தொடங்கி லட்சுமணன், இல.கணேசன், பொன்ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், நான், இப்போதைய தலைவர் அண்ணாமலை வரை கட்சியின் பங்களிப்பு என்பது மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நிர்மலா சீதாராமனுடன், எஸ்.பி.வேலுமணி சந்தித்தது இயல்பானது.
தமிழ்நாட்டில் 9 நாடாளுமன்ற தொகுதிகளை அடையாளம் கண்டு வியூகத்துடன் தேர்தல் பணியாற்ற உள்ளோம். பாஜக மத்திய தலைமை இந்தியா முழுவதும் 150 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று. அதில் தமிழகத்தில் 9 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு கர்நாடக தேர்தல், தொடர்ந்து ராஜஸ்தான் உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அகில இந்திய தலைமைப்படி எங்களுடைய நாடாளுமன்ற பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.