Saturday, July 27, 2024
Home » சென்னையில் நடத்திய சோதனையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.84 கோடி அதிரடி பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

சென்னையில் நடத்திய சோதனையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.84 கோடி அதிரடி பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

by Ranjith

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் ரூ.50,000க்கும் மேல் எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.

இல்லையெனில், அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். உரிய ஆவணம் காண்பித்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வட சென்னை தொகுதிக்குட்பட்ட ராயபுரம் என்ஆர்டி மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் கூட்டுறவு சார்பதிவாளர் பாலாஜி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, சிஎம்எஸ் என்ற தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிக்கு சொந்தமான வேனில், ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்த, ரூ.1 கோடியே 28 லட்சத்து 70 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அதற்கு உரிய ஆவணம் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 7வது மாடியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். பின்னர், தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர்கள் உரிய ஆவணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காண்பித்து பணத்தை பெற்று சென்றனர்.

* மண்ணடி ஜாபர் சராங் தெருவில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்த வாகன சோதனையில், மொபட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டு வந்த ஏழுகிணறு சர்ச் தெருவை சேர்ந்த சையத் அபுதாஹிர் (39) என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட மடுவின்கரை, ஐந்து பர்லாங் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் மினிவேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் நிறுவன உரிமையாளர் மணிகண்டன் வைத்திருந்த ரூ.40 லட்சத்து 79 ஆயிரத்து 670 பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

* வடசென்னை தொகுதி ஆர்.கே.நகர் பகுதிக்கு உட்பட்ட டி.எச்.சாலை சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் தலைமையில் சோதனை நடந்தது. இதில், திருவொற்றியூர் துலுக்காணம் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டு, உதவி கருவூல அலுவலர் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

* புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை டோல்கேட் பகுதியில் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் நடந்த வாகன சோதனையில், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில், ஏழுகிணறு சீனிவாசா ஐயர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் (60) என்பவர், உரிய ஆவணங்களின்றி ரூ.78 ஆயிரத்து 480 எடுத்து சென்றது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

* புது வண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் நடந்த வாகன சோதனையில், அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில், திருவொற்றியூர் சரவணன் தெருவை சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர், உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் கொண்டு சென்றது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போரூர் ரவுண்டானா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின்போது, சென்னையில் இருந்து குரோம்பேட்டை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அண்ணாநகரை சேர்ந்த காசிநாதன் (62), என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.76 ஆயிரம் எடுத்து சென்றது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

* போரூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அரி என்வர் உரிய ஆவணம் இன்றி ரூ.63 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

 

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi