ஜெனிவா: உக்ரைன், சூடான் போர்கள் காரணமாக 11 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கியநாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இந்த போர்களில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் போரால் ஏற்படும் துன்புறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள் காரணமாக உக்ரைன், சூடான் நாடுகளில் இருந்து 11 கோடி மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா அகதிகள் பிரிவின் தலைமை அதிகாரி பிலிப்போ கிரான்டி கூறும்போது, “சூடான் உள்நாட்டு மோதலால் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20 லட்சம் பேர் வௌியேறியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1.9 கோடி மக்கள் சொந்த நாட்டை விட்டு வௌியேறினர். இதில் 1.1 கோடி பேர் ரஷ்யா போரினால் உக்ரைனிலிருந்து குடிபெயர்ந்துள்ளனர். இது 2ம் உலகப் போருக்கு பின் அதிகளவு மக்கள் இடம் பெயர்வாகும். கடந்த 2022ம் ஆண்டில் எத்தியோப்பியா, காங்கோ மற்றும் மியான்மர் ஜனநாயக குடியரசு நாடுகளின் மோதல்கள் காரணமாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 10 லட்சம் மக்கள் அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். இது சில நாடுகளின் தற்போதைய நிலை மீதான குற்றச்சாட்டு” என்று தெரிவித்தார்.