டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இம்மாதம் 4வது வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 22, 23ம் தேதிகளில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 2ம் தேதி தெரிவித்தது.
இதனிடையே அரசமைப்பு சட்டம் 370வது பிரிவு ரத்து குறித்த ரித் மனுக்களை விசாரிக்க தொடங்கியதால் வேதாந்தா மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் சார்பில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது. இதனையேற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு ஜனவரி 4வது வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.