புதுச்சேரி: சுனாமி நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஏற்பட்டது. இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சுனாமி பேரலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் புதுச்சேரியில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர்.
இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சுனாமியால் இறந்தவர்களுக்கு புதுச்சேரி கடற்கரையில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் அனுசரிக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு கடலில் மலர் தூவி,பால் ஊற்றி சுனாமியின் போது உயிரிழந்தவர்களின் படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.