Tuesday, May 21, 2024
Home » போர் நீடிக்கும் நிலையில் முதல் முறையாக 20 லாரிகளில் காசாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு: 2 அமெரிக்க பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

போர் நீடிக்கும் நிலையில் முதல் முறையாக 20 லாரிகளில் காசாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு: 2 அமெரிக்க பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

by Ranjith

ரபா: இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முதல் முறையாக எகிப்து எல்லை வழியாக காசாவிற்குள் நிவாரண பொருட்கள் 20 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தாய், மகளான 2 அமெரிக்க பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த 7ம் தேதி முதல் கடுமையான போர் நடந்து வருகிறது. நேற்று வரை 15வது நாளாக நீடிக்கும் இப்போரில் காசாவில் 4,385 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.

இதில், 1,756 பேர் குழந்தைகள், 967 பேர் பெண்கள் ஆவர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காசாவை முழுமையாக இஸ்ரேல் முற்றுகையிட்டு, தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருவதால், லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து, உணவு, குடிநீர் இன்றி தவிக்கின்றனர். மருத்துவமனைகளில் மருந்து, மின்சாரம் இன்றி கடும் இன்னலை சந்திக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்கா, ஐநா உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் மத்தியஸ்த அமைப்புகளின் ஒருவார முயற்சியினால் 15 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக காசாவிற்குள் நிவாரண உதவி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபா கிராசிங் பகுதியிலிருந்து 20 லாரிகளில் உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் வடக்கு பகுதியிலிருந்து 10 லட்சம் பேர் தெற்கு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில் இந்த நிவாரண பொருட்களின் அளவு மிக மிக குறைவு என காசாவில் உள்ள தன்னார்வலர்கள் கூறி உள்ளனர். ஐநாவின் உலக உணவு திட்டத்தின் தலைவர் சிண்டி மெக்கைன் கூறுகையில், ‘‘தற்போது அனுப்பிய நிவாரண உதவிகள் கடலில் கலந்த ஒரு துளி நீர் போன்றது. போருக்கு முன்பாக தினமும் 400 லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்படும். தற்போது 20 லாரிகள் சொற்ப அளவிலானது.

காசாவில் நுழைய எகிப்து எல்லையில் 200 லாரிகளில் 3,000 டன் உதவிப் பொருட்கள் காத்திருக்கின்றன. போரால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் நிறைய, நிறைய லாரிகளில் உதவிப் பொருட்களை அனுப்புவது அவசியம்’’ என்றார். காசாவிற்குள் அனுப்பும் நிவாரண உதவியை கட்டுப்படுத்தினால், மனிதப் பேரழிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என ஹமாஸ் படையினரும் கூறி உள்ளனர். இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், ‘‘ஹமாஸ் மொத்தம் 210 பணயக் கைதிகளை பிடித்து வைத்துள்ளனர்.

அவர்களை பத்திரமாக அனுப்பும் வரை மனிதாபிமான உதவிகளில் கட்டுப்பாடுகள் தொடரும்’’ என்றார். அதே சமயம் மத்திய கிழக்கு நாடுகளுடனான பேச்சுவார்த்தையின்போது அளித்த வாக்குறுதியின்படி, நிவாரண உதவிகளுக்கு பிரதிபலனாக 2 பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் நேற்று விடுவித்தனர்.
அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த ஜூடித் ரானன் மற்றும் அவரது 17 வயது மகள் நாடாலி ஆகியோரை ஹமாஸ் விடுதலை செய்தது. மேலும் பாதுகாப்பு சூழல் ஒத்துழைத்தால் மேலும் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாசுடன் எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

* தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
நிவாரண உதவிகளை அனுப்ப மறுத்து வரும் இஸ்ரேல் ராணுவம் மறுபுறம் காசாவிற்குள் தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறது. இதற்காக இஸ்ரேல் எல்லையில் ராணுவ வீரர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு செல்போன் மூலம் பதிவு செய்த குரல் தகவல் நேற்று அனுப்பப்பட்டது. அதில் தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டுமென்றும் இல்லாவிட்டால் நடக்கும் விளைவை சந்திக்க வேண்டுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

5 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi