சென்னை: தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மூவரும் எக்ஸ் வலைதளத்தில் தங்கள் கருத்தை பதிவை செய்துள்ளனர்.
இதை அவதூறாக கருத முடியாது.பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்புதான். இதே விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கோரியுள்ளார். உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் மன்சூர் அலிகான் மனு ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த மன்சூர் அலிகான் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.