அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 1978 முதல்1988 வரையிலும், பின்னர் 1993 முதல் 2018 வரையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி பொறுப்பில் இருந்தது . 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட்டை தோற்கடித்து பாஜ ஆட்சியை பிடித்தது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ மீண்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது நடக்கும் மக்களவை தேர்தலில் திரிபுராவில் உள்ள 2 எம்.பி. தொகுதிகளில் தலா ஒன்றில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. பாஜ 2 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜ மூத்த தலைவரும் திரிபுரா முதல்வருமான மாணிக் சகா நேற்று அளித்த பேட்டியில், திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி வலுவான கட்சியாக திகழ்கிறது. அந்த கட்சியை பாஜவால் புறக்கணிக்க முடியாது. மக்களவை தேர்தலோ உள்ளாட்சித் தேர்தலோ அதை வெல்வது அவ்வளவு சுலபம் இல்லை என்றார்.