சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வந்தவர் மஞ்சுநாதா லூயிஸ் ரவி. இவரும், ஒரு பெண் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சக்திவேல்(33) மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி டாக்சியில் வந்துள்ளனர். டாக்சியில் இருந்து கீழே இறங்கியபோது மஞ்சுநாதா மற்றும் சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சக்திவேல் மஞ்சுநாதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த மஞ்சுநாதாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரால் தானாக எழுந்து நிற்க முடியவில்லை. இந்நிலையில் காயமடைந்த மஞ்சுநாதாவை சக்திவேல் மற்றும் உடன் இருந்த பெண் ஆகியோர் தூக்கி நிற்க வைக்க முயன்றுள்ளனர். அப்போது இரண்டு முறை அவரை கீழே போட்டதாக தெரிகிறது. இதில் அவருக்கு மேலும் காயமேற்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 5 நாட்களுக்கு பின் மஞ்சுநாதா உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, ‘‘கீழே விழுந்ததில் ஏற்பட்ட ஆரம்ப காயத்தால் மஞ்சுநாதா இறக்கவில்லை என்றும் அவரை வேறு இடத்திற்கு மாற்ற முயன்றபோது தவறாக கையாளப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளதாகவும், சக்திவேல் குற்றவாளி என்றும் தீர்ப்பு கூறினார். தண்டனை விவரங்களை நீதிமன்றம் அடுத்த மாதம் தெரிவிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.