திருவெறும்பூர்: நாகமங்கலம் பள்ளப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் சீறி பாய்ந்தன. 300 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். திருச்சி மாவட்டம் நாகமங்கலம் அடுத்த பள்ளப்பட்டியில் கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக திருச்சி, புதுகை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தி தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது.
மாடுபிடி வீரர்களுக்கு மணிகண்டம் வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தா தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
களத்தில் பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக நின்று விளையாடியது. களத்தில் காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, எவர்சில்வர் பாத்திரங்கள், ரொக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.