திருச்சி, ஏப்.18: திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று சுமை தூக்குவோரின் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநிலத் தலைவர் வீரராகவன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 1997ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் அறிவித்தபடி பணி நிரந்தர சலுகையை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும். சங்க அங்கீகார தேர்தலை உடன் நடத்த வேண்டும். சுமை தூக்குவோருக்கு பணி நிரந்தரம் இல்லாததால் அவர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை டிஎன்சிஎஸ்-யில் ஒப்பந்த தொழிலாளர்களை சேர்க்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் டிஎன்சிஎஸ்சியின் சுமை துாக்கும் பணியாளர்கள் கொத்தடிமை போன்று நடத்தப்படுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பெயர்களை உடன் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக மாநில துணைத் தலைவர் தனபாலன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் முனுசாமி நன்றி கூறினார். இதில் சங்கத்தின் தெய்வேந்திரன், கிருஷ்ணன், சதீஷ்குமார் மற்றும் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
previous post