சென்னை: சாலிகிராமம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் சுப்பு (65). இவர், பிரபல ஓட்டல் குழுமத்தில் அலுவலக ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.நகர் பனகல் பார்க் அருகே உள்ள துணிக்கடை ஒன்றில் பிரபல ஓட்டலின் கிளை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு முன்னாள் ஊழியர் என்ற முறையில் சுப்பு கலந்து கொண்டார். பின்னர், அங்கிருந்து தனது காரில் உடன் பணியாற்றிய ஹரிஷ் என்பவரை ஏற்றி கொண்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காரை சுப்பு ஓட்டினார். அசோக் நகர் போஸ்டல் காலனி 3வது தெரு வழியாக சென்றபோது, திடீரென மரக்கிளை ஒன்று கார் மீது விழுந்தது. இதில் காரின் முன் கண்ணாடி உடைந்து காரை ஓட்டி வந்த சுப்புவின் வலது பக்க மார்பில் குத்தியது. உடனே அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் நாகராஜ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுப்புவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரைப்படி வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரிய நேரத்தில் காயமடைந்த சுப்புவை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அபத்து கட்டத்தை தாண்டி தற்போது நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.