சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்காக எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக அமைச்சர் சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார். 96 மாத காலமாக ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தரவில்லை என பழனிசாமி அறிக்கையிலே கூறியிருக்கிறார். 65 மாத காலம் அகவிலைப்படி கொடுக்காமல் இருந்தது எடப்பாடி பழனிசாமிதானே என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; ” போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நீலிகண்ணீர் வடிக்கும் எடப்பாடி ! 96 மாத காலமாக ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என உங்கள் அறிக்கையிலே சொல்லியிருக்கிறீர்களே, அதை நிறுத்தியதே நீங்கள் தானே! 65 மாத காலம் அகவிலைப்படி கொடுக்காமல் இருந்தது நீங்கள் தானே!
இதை சொல்லி பேருந்தை நிறுத்தினால், மக்கள் திமுக அரசு மீது கோபப்படுவார்கள் எனது உங்கள் கற்பனை. ஆனால் உங்கள் வேடம், உங்கள் அறிக்கையாலேயே கலைந்து விட்டது. மக்கள் உண்மையை அறிவார்கள். மக்களுக்கு இடையூறாக பொய் சொல்லி ஒரு போராட்டம் நடத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.