திருத்தணி: திருத்தணி அருகே ரயில்மோதி கூலித்தொழிலாளி பலியானார். திருத்தணி ஒன்றியம் அலமேலுமங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.எம்.பேட்டையைச் சேர்ந்தவர் ரகு(47). கூலித்தொழிலாளி. இவர், நேற்று தனக்கு சொந்தமான மாடுகளை பொன்பாடி ரயில் நிலைய தண்டவாளம் அருகே மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது ரகுவின் மீது எதிர்பாராதவிதமாக திருப்பதியில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற அதிவிரைவு ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி ரகு பரிதாபமாக பலியானார். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.