மும்பை: ஆள்கடத்தல் சந்தேகத்தின் பேரில் பிரான்சில் 4 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானம், 276 பயணிகளுடன் மும்பை வந்தடைந்தது. கடந்த 21ம் தேதி ரோமானிய நிறுவனத்தைச் சேர்ந்த ஏ340 என்ற விமானம் துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா நோக்கி புறப்பட்டது. அதில் 300க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் இந்தியர்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே இருக்கும் வத்ரி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியபோது ஆள் கடத்தல் நடப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், விமானத்தை தடுத்து நிறுத்தினர்.அதில், 2 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்சில் தங்கிவிட அதிகாரிகளிடம் அடைக்கலம் கோரினர். 4 நாட்களாக பயணிகள் அனைவரிடமும் விசாரணை நடந்தது. பின்னர் 25 பேர் மற்றும் 2 ஏஜென்ட்டுகள் தவிர மற்ற 276 பயணிகளும் விமானத்தில் புறப்பட்டனர். அந்த விமானம் நேற்று காலை 4.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தது.