Sunday, May 12, 2024
Home » போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அதிக அபராதம் விதிக்கப்படுகிறது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அதிக அபராதம் விதிக்கப்படுகிறது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

by Karthik Yash

சென்னை: ‘‘போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது’’ என்று ஐகோர்ட்டில் அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசின் உள்துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில், விதிமீறல்கள் தொடர்வதால், அரசாணையை தீவிரமாக அமல்படுத்தும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், அபராதத் தொகையை உயர்த்தியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு; வாகன தணிக்கையில் ஈடுபடுவதை போக்குவரத்து மற்றும் காவல் துறைகளை சேர்ந்தவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில், சிறிய சாலையில் செல்லும் இரு சக்கர வாகனம், ஷேர் ஆட்டோ முதல் நெடுஞ்சாலையில் இயங்கும் கன ரக வாகனங்கள் வரை போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால் உயிரிழப்புகளும், காயமடைந்து உடலுறுப்புகளை இழப்பதும் தொடர்கதையாக உள்ளது. விதிமீறலில் ஈடுபடுவோரை மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பணியாற்றுமாறு உத்தரவிட வேண்டும்.

அரசு மற்றும் காவல்துறைக்கு ஜூலை 4ம் தேதி கடிதம் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனது கடிதத்தை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா விளக்கம் அளித்தார்.
குறிப்பிட்டு எந்த சம்பவத்தையும் மனுதாரர் மனுவில் தெரிவிக்கவில்லை. போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

sixteen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi