சிலிகுரி: மேற்கு வங்கம், குஜராத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 2 மெகா சுற்றுலா வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரி மற்றும் டார்ஜிலிங் நகரங்களில் ஜி-20 சுற்றுலா துறை மாநாடு நடந்தது. இதில் பங்கேற்று பேசிய ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘’கங்கை மற்றும் வடமேற்கு இமாலயம் பகுதிகளில் 2 மெகா சுற்றுலா வழித்தடங்களைத் தொடங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில், அமர்கண்டக் முதல் அரபி கடல் வரையிலான நர்மதா வழித்தடம், கிழக்கு கடற்கரையில் மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி மற்றும் மேற்கு கடற்கரையில் கட்ச் முதல் கன்னியாகுமரி வரையிலான காவிரி வழித்தடம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன. பிற மாநிலங்களிலும் மெகா சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும். நாட்டில் 7,000 கி.மீ. தூரத்துக்கு கடற்கரையும், இமாலயத்தின் 70 சதவீதத்தில், 700 கி.மீ. தூரத்துக்கு ஆறுகள், பாலை வனங்கள் மற்றும் லடாக்கில் பனிமலை உள்ளது. இந்த நிலப்பரப்பு நிலையான சாகச சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது,’’ என்று தெரிவித்தார்.