ராமேஸ்வரம்: தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளில் இறால் அதிகளவு சிக்கியதால் உற்சாகமடைந்தனர். தமிழக கடலில் அமலில் இருந்த 60 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். 800க்கும் மேற்பட்ட விசை படகுகளில் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர். கரை திரும்பிய படகுகளில் இறால், நண்டுகள் டன் கணக்கில் இருந்தன. சிறிய படகு முதல் பெரிய படகு வரை தலா 200 கிலோ முதல் 350 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்தது. மேலும் பல வகையான ரகங்களில் மீன்களும் டன் கணக்கில் பிடிபட்டு இருந்தன. படகில் பிடிபட்ட மீன் மற்றும் இறால்களை மீனவர்கள் ரகம் வாரியாக தரம் பிரித்து கூடைகளில் அள்ளி கரைக்கு கொண்டு வந்தனர். எதிர்பார்த்த அளவுக்கு மீன்பாடு இல்லாத போதும், திருப்திகரமாக மீன்கள் கிடைத்ததால் லாபம் கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் இறால்
previous post