நீலகிரி: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்துவருவதன் தொடர்ச்சியாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனிடையே மத்திய அரபிக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் இன்று வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (09.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி நாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.