சென்னை: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல்களை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10, 11 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் திருப்தி இல்லாதவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இருப்பினும் விடைத்தாள் நகல் கோருபவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்றதும் அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணமும், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205ம் கட்டணம் செலுத்த வேண்டும்.