Monday, June 17, 2024
Home » யோசிக்க வேண்டும்

யோசிக்க வேண்டும்

by Dhanush Kumar

நா டாளுமன்ற தேர்தலுக்கு முன் நடந்த 5 மாநில தேர்தலில் கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி 3 மாநிலங்களில் பாஜவும், ஒரு மாநிலத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. இதில் இருந்து காங்கிரஸ், சுய பரிசோதனை செய்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியை போன்றது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஏனெனில் இந்த மாநிலங்களில் 83 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் வெற்றி பெறுவது நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்புகளுக்கு பிரகாசமாக இருக்கும் என இரு கட்சிகளுமே நம்பின. இதற்கு முன் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் குஜராத் மற்றும் திரிபுராவில் வெற்றி பெற்ற பாஜக, கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரசிடம் தோல்வியை தழுவியது.

நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவான அலையை உருவாக்குவதற்காக பாஜ, 5 மாநில தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தியது. அதே போன்று, காங்கிரஸ் இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம், இந்தியா கூட்டணியில் பிற கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டின் போது தனக்கு கூடுதலான இடங்களை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்த்தது. 5 மாநில தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மிசோரமில் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணி பின்னடவை சந்தித்தது. மாநில கட்சியான சோரம் மக்கள் இயக்கம் அறுதிப் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர்களை பாஜ அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டது. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங், பெண்களை கவர பல்வேறு திட்டங்களை அறிவித்து இருந்தார். தமிழகத்தை போல் சத்தீஸ்கரில் மகளிருக்கு ரூ.1,000 வழங்குவதாக பாஜ அறிவித்தது. ராஜஸ்தானில் ரூ.450க்கு சிலிண்டர், பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் டெபாசிட் என பாஜ அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டது. இதுபோன்று காங்கிரசும் தேர்தல் அறிவிப்புகளிலும் ஏராளமான கவர்ச்சி அறிவிப்புகள் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் இருந்தது. ராஜஸ்தானில் சச்சின் பைலட், அசோக் கெலாட் ஆகியோரின் மோதல் கடைசி நேரத்தில் தான் கட்சி தலைமை சமாதானப்படுத்தியது.

பாஜ போன்று காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. பெரும்பாலான கருத்து கணிப்புகளும் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் தெலங்கானா தவிர்த்து காங்கிரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கான காரணத்தை காங்கிரஸ், ஆழமாக அலசி பார்க்க வேண்டும். பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைத்து 3 முறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தி உள்ளது. அதன்படி இந்த 5 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னோட்டம் பார்த்திருக்க வேண்டும். சமாஜ்வாடி, ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளடக்கிய கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டு இருக்க வேண்டும். தெலங்கானாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் காங்கிரஸ் ஒரு சீட் ஒதுக்கியது.

ராஜஸ்தானில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி போன்ற கட்சிகளை அனுசரித்து தொகுதிகளை ஒதுக்கி காங்கிரஸ் போட்டியிட்டிருந்தால் வென்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். காரணம் ராஜஸ்தானில் காங்கிரஸ் 39.53 சதவீதமும், பாஜ 41.69 சதவீதமும் வாக்குகள் பெற்றது. 2.16 சதவீதம் வாக்குகள் வித்தியாசம் தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வெளியேற்ற வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளை அனுசரித்து காங்கிரஸ் வெற்றி பெற யோசிக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

6 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi