சேலம்: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நேற்று, சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடந்த 16வது லீக் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், பந்துவீச்சை தேர்வு செய்தார். கோவை அணியின் தொடக்க வீரர்களாக சுரேஷ்குமார்-சுஜய் களமிறங்கி அதிரடியாக ஆடினர். 29 ரன்னில் சுரேஷ்குமார் அவுட்டாக, நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். அவர் பேட்டில் இருந்து பவுண்டரியும், சிக்சர்களும் பறந்தன. 20 ஓவரில் கோவை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் குவித்தது. அதிகபட்சமாக சாய்சுதர்சன் 83 ரன் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்தார். திண்டுக்கல் தரப்பில், சரவணகுமார் 3 விக்கெட் வீழ்த்தினார். 207 ரன் அடிக்க வேண்டிய கடின இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி, ஆரம்பம் முதலே திணறியது. ராகுல் 1, தினேஷ் 0, பாபா இந்திரஜித் 1, வைஷ்ணவகுமார் 17, கேப்டன் அஸ்வின் 5 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். முடிவில் திண்டுக்கல் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கோவை 59 ரன் வித்தியாசத்தில் 4வது வெற்றியை பெற்றது. திண்டுக்கல் அணிக்கு இது முதல் தோல்வியாகும். ஆட்டநாயகன் விருதை சாய் சுதர்சன் பெற்றார்.