சென்னை: தென்னிந்தியார்கள் கருப்பர்கள் என கூறிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடாவை கண்டித்து தமிழ்நாடு பாஜ சார்பில் நேற்று முன்தினம் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் திட்டமிட்டப்படி பாஜ மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பாஜ மாநில துணை தலைவர் கரு நாகராஜன், தென் சென்னை மகளிர் அணி மாவட்ட தலைவர் ரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தடைமீறி போராட்டம் நடந்ததால் நுங்கம்பாக்கம் போலீசார் பாஜ மாநில துணை தலைவர் கருநாகராஜன் உள்ளிட்ட 270 பேரை கைது செய்து விடுவித்தனர். பின்னர் தடைமீறி போராட்டம் நடத்தியதால் நுங்கம்பாக்கம் போலீசார் 270 பேர் மீது ஐபிசி 143 மற்றும் சிட்டி போலீஸ் சட்டம் 41 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.